Friday 2 March 2012

மனிதர்கள் எத்தனை விதம்!

நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்தித்து வருகிறோம். ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் முன்கோபவாதி, சிலர் வெகுளி, சிலர் கள்ளத்தனம் உள்ளவர், சிலர் மிகவும் நல்லவர், சிலர் வஞ்சனை உள்ளவர், சிலர் சுயநலவாதி இப்படி எத்தனையோ.

என்னை பொறுத்தவரையில் எவரோடு வேண்டும் என்றாலும் நாம் பழகிவிடலாம். ஆனால் இந்த சுயநலம் உள்ளவரோடு மட்டும் நம்மால் நட்பு பாராட்ட முடியாது. எனது இந்த 30 ஆண்டு கால வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சில சுயநலம் உள்ள மக்களை பற்றி இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1) ஐந்து /ஆறு வருடங்களுக்கு முன்பு வடஇந்தியாவில் வேலை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது எங்கள் அலுவலக தமிழ் நண்பர்கள் ஒன்றாக ஒரு வீட்டில் வாடகைக்கு குடி இருந்தோம். அந்த வீட்டில் எனக்கு முன்பாக 2 தமிழ் நண்பர்கள் எனது அலுவலக நண்பர்களுடன் குடி இருந்தனர். அப்போது நடந்த சம்பவம் இது. அந்த ஐந்து பேரில் இருவர் விடுப்பில் ஒரு 15 நாட்கள் தமிழகம் வந்தனர். ஆனாலும் அந்த இருவர் தங்கள் மாத வீட்டு வாடகையில் தங்கள் ஒரு மாத பங்கு'ஐ செலுத்தினர்.  சில மாதங்கள் கழித்து மற்ற இருவர் தீபாவளி திருநாளுக்காக தமிழகம் சென்றனர். அவர்கள் வந்த பிறகு, தாங்கள் 15 நாட்கள் தான் வீட்டில் தங்கியதால் பாதி மாத வாடகை மட்டும் செலுத்துவதாக கூறினர்.  முன்பு ஊருக்கு சென்ற இரண்டு பேரிடம் மட்டும் முழுவதுமாக வாடகை பங்கை வாங்கியவர்கள், தாங்கள் ஊருக்கு சென்ற மாதத்தில் முழு வாடகை செலுத்த மாட்டோம்  என்று பிரச்சனை செய்தனர். சட்டையை கோர்த்து கொண்டு சண்டை பிடிப்பதுவும் நடந்தது. பார்த்துகொளுங்கள் தங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம்.

2) அடுத்ததாக வரும் நபரும் எனது நண்பராக வாய்த்தது தான் எனது துர்ரதிஷ்டம். இப்படி பட்ட ஒரு கஞ்சனையோ ஒரு சுயநலம் உள்ள மனிதரையோ நான் இது வரையில் சந்தித்தது இல்லை. இவர் ஒரு முறை நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். அங்கே ஒரு முறை ஹோட்டலில்  சாப்பிடும் போது "நாம் சாப்பிடும் சாப்பாடு கணக்கு பொது" என்று கூறிவிட்டு தலைவர் பிரியாணி, சிக்கன், முட்டை, மட்டன் என்று வெளுத்து கட்டிவிட்டார். இதில் எங்கே பிரச்சனை வந்ததோ தெரியவில்லை. அடுத்தநாள் "அவங்க அவங்க சாபிடுரதுக்கு அவங்களே பில் கட்டுங்க" என்று கூறி அப்பொழுது அவர் வெறும் இரண்டு தோசை மட்டும் எடுத்து கொண்டார். பார்த்துகொள்ளுங்கள் அடுத்தவர் காசு என்று வந்துவிட்டால் எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடுவது, தனது காசு என்று வந்துவிட்டால் சிக்கனமாக இருப்பது. இவரை பற்றி இன்னொரு சுவையான செய்தி. தனது தந்தைக்கு கொடுத்த பணத்தை (சில ''கரங்கள்), வட்டியுடன் திரும்ப வாங்கியவர். பெற்ற தந்தைக்கே இந்த நிலைமை என்றால் நண்பர்கள் எம்மாத்திரம்.

இப்படி  சில சுயநலமிகளை பார்க்க நேர்ந்த எனக்கு சில உத்தமர்கள் பற்றிய செய்திகளும் எனது நண்பர்கள் மூலமாக கிடைத்தது.  இதோ அந்த சம்பவம்...

ஒரு தென்னிந்திய குடும்பத்தில் அண்ணன் தம்பி என இருவர். இதில் தம்பி வெளி நாட்டில் உள்ளார். அண்ணன் தென்னிந்தியாவில். இருவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் உள்ளனர். ஆனால் அண்ணனுக்கு 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. தம்பிக்கோ இரண்டு வாரிசு. இதனால் அண்ணனின் வேதனையை அறிந்த தம்பியும் அவரது மனைவியும் மூன்றாவதாக ஒரு குழந்தை தனது அண்ணனுக்காகவே பெற்றடுத்து  அவரிடம் அந்த குழந்தை வளர ஒப்படைத்து உள்ளனர். இப்பொழுது அந்த குழந்தை அண்ணனிடம் தென்னிந்தியாவில் வளருகிறது. குழந்தையை பிரிந்த சோகம் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் இருந்தாலும், அண்ணனுக்காக விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் கூறும் போது எல்லாம் எனக்கு தழு தழுகிறது மனது. கண்ணில் நீர் முடிக்கொண்டு வருகிறது. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருப்பது அந்த பெற்ற தாய் பற்றி தான். தம்பியாவது அண்ணன் என்ற ஒரு பாசத்தில் குழந்தையை கொடுத்துள்ளார். ஆனால் அந்த தாய் எவ்வளவு அன்பு தனது கணவரிடம் வைத்திருந்தால் அவரின் சொல் கேட்டு 10 மாதம் சிரமப்பட்டு பெற்ற குழந்தையை கொடுத்திருப்பாள்.

இப்படியும் சில நல்லவர்கள் வாழ்வதால் தான் இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டு உள்ளது.

சமர்ப்பணம்: வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம், எனது பதிவு எழுதகாரணமாய் இருப்பவர்களுக்கு அந்த பதிவு சமர்ப்பணம் செய்வது தற்பொழுது எனது பழக்கம். சில பதிவுகள் அந்த நிமிடம் எனக்கு உள்ள உணர்ச்சியில் சமர்ப்பணம் செய்வது உண்டு. இந்த சம்பவம் நான் நினைக்கும் பொழுது எல்லாம் என் மனதை நெகிழச்செய்தது. அதனால் இந்தப்பதிவு எனது உளமார அந்த "புண்ணியவதிக்கு" சமர்ப்பணம்.தாயே நீ என்றும் நலமோடு வாழ அனைவரையும் ஒன்று சேர்த்து அனைவர் சார்பிலும் அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மன்னிப்பு: இந்த பதிவில் கூறி உள்ள நபர்கள் இதை படிக்க நேர்ந்து உங்கள் மனது பாதிப்பு அடைந்தாலோ / உங்கள் அனுமதி இல்லாமல் இந்த சம்பவங்களை இங்கே பதிந்ததற்கும் என்னை மன்னித்து அருள வேண்டுகிறேன். எனது மனதில் தோன்றிய வருத்தத்தை தான் பதிவு செய்துள்லேனே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு இந்த வலைப்பதிவை ஏற்றவில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

Wednesday 15 February 2012

ஆம்பரவனேஸ்வரர்


திருப்திகரமாக பெருமாளை பார்த்தாகிவிட்டது. அடுத்ததாக சிவ பெருமானை தானே தரிசித்தாக வேண்டும். எங்களின் அடுத்த பயணம் நன்னிலம் நோக்கி. குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் நான்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் கூகூர். அங்கே பழைய கறுப்பு வெள்ளை படத்தில் வரும் பாழடைந்த கோவில் போல இருக்கிறது இந்த கோவில். அந்த கோபுரத்தின் மீது செடி ஒரு மரம் போல வளர்ந்து உள்ளது. இதன் பழமையை பற்றி விசாரித்தால், இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர்.
இக்கோவிலில் உள்ள சிவனின் பெயர் தான் இந்த ஆம்பரவனேஸ்வரர். சிவனை தரிசிப்பதற்காக இந்த காட்டில் துர்வாச முனிவர் வெறும் மாம்பழத்தை உண்டு தவம் இருந்தார் எனவும், அதனால் தான் இப்பெயர் வந்தது என்று அந்த அர்ச்சகர் கூறினார் (அவர் கூறிய சில தமிழ் வார்த்தைகளை நான் மறந்துவிட்டேன். இந்த பெயரில் வானம் என்பது காடு என்று மட்டும் எனக்கு தெரியும். இதன் முழு பெயர் காரணம் யாருக்கேனும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்). நாங்கள் சென்ற போது மிகவும் மோசமாக பாழடைந்த அந்த கோவிலில் புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் கோவில் பிரகாரத்தை பார்ப்பதற்கு கூட பாலம் போய் அமைக்கப்பட்டு இருந்த பாறைகளின் மீது நடந்து தான் செல்ல வேண்டி இருந்தது. ஒருவர் வெளியில் வரும்பொழுது அடுத்தவர் செல்ல முடியாமல் இருந்தது. கிட்டதிட்ட முக்கால் வாசி கோவில் இடிந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே அதனை கற்கள் சுற்றிலும் குவித்துவைக்கப்பட்டு இருந்தது. அதனூடே பாம்புகள் இருந்தாலும் யாருக்கும் தெரியாது. அப்படி இருந்தும் அந்த கோவிலின் அர்ச்சகர் கடமை சிரத்தை மன்னிக்கவும் பக்தி சிரத்தையோடு எங்களுக்கு கோவிலின் அருமை பெருமைகைளை கூறிக்கொண்டு இருந்தார். ஒவ்வொரு சிறு சன்னதிகளுக்கும் எங்களை கூடிக்கொண்டு இருந்தார். எனது மனதுகுள்ளே பாம்புகள் பற்றிய ஒரு சிறு பயம் அவ்வப்பொழுது எட்டிப்பார்த்தது. ஆனால் அந்த பயமோ ஒரு சலனமோ எதுவும் இன்றி மிகவும் பக்தியோடும், கோவில் இப்படி உள்ளது பற்றி சிறு வேதனையோடும், கோவிலுக்கு தற்பொழுது நடைபெறும் புனரமைப்பு வேலைகள் பற்றி பெருமையாகவும், ஒரு ஆசையோடும் அந்த அர்ச்சகர் எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் சென்ற சமயத்தில் ரூ.10 லட்சம் வரை புதுப்பிப்பு வேலைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பார்த்த அர்ச்சகர் போன்றே இவரது முகத்திலும் ஒரு ஆர்வம, ஒரு பக்தி, ஒரு அமைதி, ஒரு பெருமை, சேவை செய்யும் மனப்பாண்மை என அனைத்தையும் பார்க்க முடிந்தது. நான் சந்தித்த பிரபலமான கோவில்களின் அர்ச்சகர்கள் வங்கி காசாளர்கள் (Cashiers) போலவும், கோவிலை ஒரு தொழில் செய்யும் இடமாக (Business Centers)  மாற்றியது போல இல்லாமல் இவ்வளவு பக்திமயமாக இருந்தது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அப்பேற்பட்ட தெய்வ குழந்தைகளுக்காக எனது இந்த இரண்டாவது சமர்ப்பணம்.

கல்வெட்டு  ஆர்வலர்களுக்கு அந்த ஊரில் இந்த கல்வெட்டு பற்றிய தகவல் அறிய 
http://tamilartsacademy.com/books/tavam/chapter17.xml

டிஸ்கி: விகடன் மொழியில் கூறுவது என்றால் மேலே கூறிய எனது ஷொட்டு (பேஷ் பேஷ்) அந்த தெய்வ குழந்தைகளுக்கு என்றால் எனது குட்டு கடவுள் என்று கூறிக்கொள்ளும் சில (அயோக்கிய) “ஆனந்தா”க்களிடம் காசை கொட்டும் முட்டாள்களுக்கு.

குடவாசல் ஸ்ரீநிவாச பெருமாள்

பொங்கல் விடுப்பில் நான் ஊரில் இருந்த சமயம் எனது குடும்பத்துடன் எங்கள் நட்பு வட்டம் சூழ கும்பகோணம் சுற்றி உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு வட்டம் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று இது போல் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பார்த்திராத கோவில்கள் என்று செல்வார்கள். இந்த முறை அப்படி செல்லுகையில் மிகவும் ஆச்சிர்யமான பல கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு கோவில்களுக்கு என்று தல புராணம் என்று அக்கோவில் அமைந்த விதம் பற்றி கதை கூறுவது உண்டு. அப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு தல புராணம் இருந்தாலும் பெரும்பான்மையான கோவில்களின் அமைப்பு அல்லது வாசல் ஒன்று போல இருக்கும். பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.
ஆனால் அன்று சென்ற எட்டு கோவில்களில் ஒரு கோவில் மற்ற கோவில்களில் இருந்து அமைப்பில் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அந்த கோவில் கும்பகோணம் அருகே குடவாசல் என்ற ஊரில் இருந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆகும். இதன் சிறப்பு என்ன என்றால் அந்த கோவிலில் எம்பெருமான் அந்த திருப்பதி வெங்கடாசலபதியின் இளைய சகோதரர் என்கிற சம்பரதாயதோடு திருப்பதியை பார்த்தவாறு வடக்கு நோக்கி வீற்றிருப்பார். இந்த பூலோகத்தில் எந்த ஒரு பெருமாள் கோவிலும் இப்படி வடக்கு திசை நோக்கி எம்பெருமான் காட்சி தரமாட்டார், இந்த ஒரு கோவிலை தவிர. நாங்கள் கோவில் மாலை 4 மணிக்கு திறப்பதற்கு முன்பே அங்கு சென்று சேர்ந்தோம். கோவிலை திறக்க வந்த அர்ச்சகர் எங்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து எங்களுக்கு மிகவும் பொறுமையாக இந்த கோவிலின் சிறப்பை கூறிக்கொண்டு இருந்தார். அப்படி அவர் கூறிய போது அவரின் அந்த முகத்தில் ஒரு பக்தி பரவசத்தை பார்க்க வேண்டுமே... ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி, என்ன ஒரு களிப்பு. பக்தர்கள் சேவையை அந்த பெருமாளுக்கு செய்யும் சேவையை நினைக்கும் ஒரு சில அர்ச்சகார்களில் அவரும் ஒருவர் எனது மனதில் பட்டார். அப்படி பட்ட உண்மையான கடவுள் ஊழியர்களுக்காக இதுவும் எனது அடுத்த பதிவும் சமர்ப்பணம்.