Friday 2 March 2012

மனிதர்கள் எத்தனை விதம்!

நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்தித்து வருகிறோம். ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் முன்கோபவாதி, சிலர் வெகுளி, சிலர் கள்ளத்தனம் உள்ளவர், சிலர் மிகவும் நல்லவர், சிலர் வஞ்சனை உள்ளவர், சிலர் சுயநலவாதி இப்படி எத்தனையோ.

என்னை பொறுத்தவரையில் எவரோடு வேண்டும் என்றாலும் நாம் பழகிவிடலாம். ஆனால் இந்த சுயநலம் உள்ளவரோடு மட்டும் நம்மால் நட்பு பாராட்ட முடியாது. எனது இந்த 30 ஆண்டு கால வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சில சுயநலம் உள்ள மக்களை பற்றி இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1) ஐந்து /ஆறு வருடங்களுக்கு முன்பு வடஇந்தியாவில் வேலை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது எங்கள் அலுவலக தமிழ் நண்பர்கள் ஒன்றாக ஒரு வீட்டில் வாடகைக்கு குடி இருந்தோம். அந்த வீட்டில் எனக்கு முன்பாக 2 தமிழ் நண்பர்கள் எனது அலுவலக நண்பர்களுடன் குடி இருந்தனர். அப்போது நடந்த சம்பவம் இது. அந்த ஐந்து பேரில் இருவர் விடுப்பில் ஒரு 15 நாட்கள் தமிழகம் வந்தனர். ஆனாலும் அந்த இருவர் தங்கள் மாத வீட்டு வாடகையில் தங்கள் ஒரு மாத பங்கு'ஐ செலுத்தினர்.  சில மாதங்கள் கழித்து மற்ற இருவர் தீபாவளி திருநாளுக்காக தமிழகம் சென்றனர். அவர்கள் வந்த பிறகு, தாங்கள் 15 நாட்கள் தான் வீட்டில் தங்கியதால் பாதி மாத வாடகை மட்டும் செலுத்துவதாக கூறினர்.  முன்பு ஊருக்கு சென்ற இரண்டு பேரிடம் மட்டும் முழுவதுமாக வாடகை பங்கை வாங்கியவர்கள், தாங்கள் ஊருக்கு சென்ற மாதத்தில் முழு வாடகை செலுத்த மாட்டோம்  என்று பிரச்சனை செய்தனர். சட்டையை கோர்த்து கொண்டு சண்டை பிடிப்பதுவும் நடந்தது. பார்த்துகொளுங்கள் தங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம்.

2) அடுத்ததாக வரும் நபரும் எனது நண்பராக வாய்த்தது தான் எனது துர்ரதிஷ்டம். இப்படி பட்ட ஒரு கஞ்சனையோ ஒரு சுயநலம் உள்ள மனிதரையோ நான் இது வரையில் சந்தித்தது இல்லை. இவர் ஒரு முறை நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். அங்கே ஒரு முறை ஹோட்டலில்  சாப்பிடும் போது "நாம் சாப்பிடும் சாப்பாடு கணக்கு பொது" என்று கூறிவிட்டு தலைவர் பிரியாணி, சிக்கன், முட்டை, மட்டன் என்று வெளுத்து கட்டிவிட்டார். இதில் எங்கே பிரச்சனை வந்ததோ தெரியவில்லை. அடுத்தநாள் "அவங்க அவங்க சாபிடுரதுக்கு அவங்களே பில் கட்டுங்க" என்று கூறி அப்பொழுது அவர் வெறும் இரண்டு தோசை மட்டும் எடுத்து கொண்டார். பார்த்துகொள்ளுங்கள் அடுத்தவர் காசு என்று வந்துவிட்டால் எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடுவது, தனது காசு என்று வந்துவிட்டால் சிக்கனமாக இருப்பது. இவரை பற்றி இன்னொரு சுவையான செய்தி. தனது தந்தைக்கு கொடுத்த பணத்தை (சில ''கரங்கள்), வட்டியுடன் திரும்ப வாங்கியவர். பெற்ற தந்தைக்கே இந்த நிலைமை என்றால் நண்பர்கள் எம்மாத்திரம்.

இப்படி  சில சுயநலமிகளை பார்க்க நேர்ந்த எனக்கு சில உத்தமர்கள் பற்றிய செய்திகளும் எனது நண்பர்கள் மூலமாக கிடைத்தது.  இதோ அந்த சம்பவம்...

ஒரு தென்னிந்திய குடும்பத்தில் அண்ணன் தம்பி என இருவர். இதில் தம்பி வெளி நாட்டில் உள்ளார். அண்ணன் தென்னிந்தியாவில். இருவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் உள்ளனர். ஆனால் அண்ணனுக்கு 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. தம்பிக்கோ இரண்டு வாரிசு. இதனால் அண்ணனின் வேதனையை அறிந்த தம்பியும் அவரது மனைவியும் மூன்றாவதாக ஒரு குழந்தை தனது அண்ணனுக்காகவே பெற்றடுத்து  அவரிடம் அந்த குழந்தை வளர ஒப்படைத்து உள்ளனர். இப்பொழுது அந்த குழந்தை அண்ணனிடம் தென்னிந்தியாவில் வளருகிறது. குழந்தையை பிரிந்த சோகம் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் இருந்தாலும், அண்ணனுக்காக விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் கூறும் போது எல்லாம் எனக்கு தழு தழுகிறது மனது. கண்ணில் நீர் முடிக்கொண்டு வருகிறது. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருப்பது அந்த பெற்ற தாய் பற்றி தான். தம்பியாவது அண்ணன் என்ற ஒரு பாசத்தில் குழந்தையை கொடுத்துள்ளார். ஆனால் அந்த தாய் எவ்வளவு அன்பு தனது கணவரிடம் வைத்திருந்தால் அவரின் சொல் கேட்டு 10 மாதம் சிரமப்பட்டு பெற்ற குழந்தையை கொடுத்திருப்பாள்.

இப்படியும் சில நல்லவர்கள் வாழ்வதால் தான் இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டு உள்ளது.

சமர்ப்பணம்: வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம், எனது பதிவு எழுதகாரணமாய் இருப்பவர்களுக்கு அந்த பதிவு சமர்ப்பணம் செய்வது தற்பொழுது எனது பழக்கம். சில பதிவுகள் அந்த நிமிடம் எனக்கு உள்ள உணர்ச்சியில் சமர்ப்பணம் செய்வது உண்டு. இந்த சம்பவம் நான் நினைக்கும் பொழுது எல்லாம் என் மனதை நெகிழச்செய்தது. அதனால் இந்தப்பதிவு எனது உளமார அந்த "புண்ணியவதிக்கு" சமர்ப்பணம்.தாயே நீ என்றும் நலமோடு வாழ அனைவரையும் ஒன்று சேர்த்து அனைவர் சார்பிலும் அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மன்னிப்பு: இந்த பதிவில் கூறி உள்ள நபர்கள் இதை படிக்க நேர்ந்து உங்கள் மனது பாதிப்பு அடைந்தாலோ / உங்கள் அனுமதி இல்லாமல் இந்த சம்பவங்களை இங்கே பதிந்ததற்கும் என்னை மன்னித்து அருள வேண்டுகிறேன். எனது மனதில் தோன்றிய வருத்தத்தை தான் பதிவு செய்துள்லேனே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு இந்த வலைப்பதிவை ஏற்றவில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

Wednesday 15 February 2012

ஆம்பரவனேஸ்வரர்


திருப்திகரமாக பெருமாளை பார்த்தாகிவிட்டது. அடுத்ததாக சிவ பெருமானை தானே தரிசித்தாக வேண்டும். எங்களின் அடுத்த பயணம் நன்னிலம் நோக்கி. குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் நான்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் கூகூர். அங்கே பழைய கறுப்பு வெள்ளை படத்தில் வரும் பாழடைந்த கோவில் போல இருக்கிறது இந்த கோவில். அந்த கோபுரத்தின் மீது செடி ஒரு மரம் போல வளர்ந்து உள்ளது. இதன் பழமையை பற்றி விசாரித்தால், இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர்.
இக்கோவிலில் உள்ள சிவனின் பெயர் தான் இந்த ஆம்பரவனேஸ்வரர். சிவனை தரிசிப்பதற்காக இந்த காட்டில் துர்வாச முனிவர் வெறும் மாம்பழத்தை உண்டு தவம் இருந்தார் எனவும், அதனால் தான் இப்பெயர் வந்தது என்று அந்த அர்ச்சகர் கூறினார் (அவர் கூறிய சில தமிழ் வார்த்தைகளை நான் மறந்துவிட்டேன். இந்த பெயரில் வானம் என்பது காடு என்று மட்டும் எனக்கு தெரியும். இதன் முழு பெயர் காரணம் யாருக்கேனும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்). நாங்கள் சென்ற போது மிகவும் மோசமாக பாழடைந்த அந்த கோவிலில் புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் கோவில் பிரகாரத்தை பார்ப்பதற்கு கூட பாலம் போய் அமைக்கப்பட்டு இருந்த பாறைகளின் மீது நடந்து தான் செல்ல வேண்டி இருந்தது. ஒருவர் வெளியில் வரும்பொழுது அடுத்தவர் செல்ல முடியாமல் இருந்தது. கிட்டதிட்ட முக்கால் வாசி கோவில் இடிந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே அதனை கற்கள் சுற்றிலும் குவித்துவைக்கப்பட்டு இருந்தது. அதனூடே பாம்புகள் இருந்தாலும் யாருக்கும் தெரியாது. அப்படி இருந்தும் அந்த கோவிலின் அர்ச்சகர் கடமை சிரத்தை மன்னிக்கவும் பக்தி சிரத்தையோடு எங்களுக்கு கோவிலின் அருமை பெருமைகைளை கூறிக்கொண்டு இருந்தார். ஒவ்வொரு சிறு சன்னதிகளுக்கும் எங்களை கூடிக்கொண்டு இருந்தார். எனது மனதுகுள்ளே பாம்புகள் பற்றிய ஒரு சிறு பயம் அவ்வப்பொழுது எட்டிப்பார்த்தது. ஆனால் அந்த பயமோ ஒரு சலனமோ எதுவும் இன்றி மிகவும் பக்தியோடும், கோவில் இப்படி உள்ளது பற்றி சிறு வேதனையோடும், கோவிலுக்கு தற்பொழுது நடைபெறும் புனரமைப்பு வேலைகள் பற்றி பெருமையாகவும், ஒரு ஆசையோடும் அந்த அர்ச்சகர் எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் சென்ற சமயத்தில் ரூ.10 லட்சம் வரை புதுப்பிப்பு வேலைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பார்த்த அர்ச்சகர் போன்றே இவரது முகத்திலும் ஒரு ஆர்வம, ஒரு பக்தி, ஒரு அமைதி, ஒரு பெருமை, சேவை செய்யும் மனப்பாண்மை என அனைத்தையும் பார்க்க முடிந்தது. நான் சந்தித்த பிரபலமான கோவில்களின் அர்ச்சகர்கள் வங்கி காசாளர்கள் (Cashiers) போலவும், கோவிலை ஒரு தொழில் செய்யும் இடமாக (Business Centers)  மாற்றியது போல இல்லாமல் இவ்வளவு பக்திமயமாக இருந்தது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அப்பேற்பட்ட தெய்வ குழந்தைகளுக்காக எனது இந்த இரண்டாவது சமர்ப்பணம்.

கல்வெட்டு  ஆர்வலர்களுக்கு அந்த ஊரில் இந்த கல்வெட்டு பற்றிய தகவல் அறிய 
http://tamilartsacademy.com/books/tavam/chapter17.xml

டிஸ்கி: விகடன் மொழியில் கூறுவது என்றால் மேலே கூறிய எனது ஷொட்டு (பேஷ் பேஷ்) அந்த தெய்வ குழந்தைகளுக்கு என்றால் எனது குட்டு கடவுள் என்று கூறிக்கொள்ளும் சில (அயோக்கிய) “ஆனந்தா”க்களிடம் காசை கொட்டும் முட்டாள்களுக்கு.

குடவாசல் ஸ்ரீநிவாச பெருமாள்

பொங்கல் விடுப்பில் நான் ஊரில் இருந்த சமயம் எனது குடும்பத்துடன் எங்கள் நட்பு வட்டம் சூழ கும்பகோணம் சுற்றி உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு வட்டம் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று இது போல் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பார்த்திராத கோவில்கள் என்று செல்வார்கள். இந்த முறை அப்படி செல்லுகையில் மிகவும் ஆச்சிர்யமான பல கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு கோவில்களுக்கு என்று தல புராணம் என்று அக்கோவில் அமைந்த விதம் பற்றி கதை கூறுவது உண்டு. அப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு தல புராணம் இருந்தாலும் பெரும்பான்மையான கோவில்களின் அமைப்பு அல்லது வாசல் ஒன்று போல இருக்கும். பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.
ஆனால் அன்று சென்ற எட்டு கோவில்களில் ஒரு கோவில் மற்ற கோவில்களில் இருந்து அமைப்பில் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அந்த கோவில் கும்பகோணம் அருகே குடவாசல் என்ற ஊரில் இருந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆகும். இதன் சிறப்பு என்ன என்றால் அந்த கோவிலில் எம்பெருமான் அந்த திருப்பதி வெங்கடாசலபதியின் இளைய சகோதரர் என்கிற சம்பரதாயதோடு திருப்பதியை பார்த்தவாறு வடக்கு நோக்கி வீற்றிருப்பார். இந்த பூலோகத்தில் எந்த ஒரு பெருமாள் கோவிலும் இப்படி வடக்கு திசை நோக்கி எம்பெருமான் காட்சி தரமாட்டார், இந்த ஒரு கோவிலை தவிர. நாங்கள் கோவில் மாலை 4 மணிக்கு திறப்பதற்கு முன்பே அங்கு சென்று சேர்ந்தோம். கோவிலை திறக்க வந்த அர்ச்சகர் எங்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து எங்களுக்கு மிகவும் பொறுமையாக இந்த கோவிலின் சிறப்பை கூறிக்கொண்டு இருந்தார். அப்படி அவர் கூறிய போது அவரின் அந்த முகத்தில் ஒரு பக்தி பரவசத்தை பார்க்க வேண்டுமே... ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி, என்ன ஒரு களிப்பு. பக்தர்கள் சேவையை அந்த பெருமாளுக்கு செய்யும் சேவையை நினைக்கும் ஒரு சில அர்ச்சகார்களில் அவரும் ஒருவர் எனது மனதில் பட்டார். அப்படி பட்ட உண்மையான கடவுள் ஊழியர்களுக்காக இதுவும் எனது அடுத்த பதிவும் சமர்ப்பணம்.

Friday 30 December 2011

நெஞ்சம் மறப்பதில்லை....

தங்களின் சாதனைகளாலும், ஆளுமை திறனாலும், கொள்கையாலும், அறிவாலும் மக்களை கவர்ந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கின்றனர். சிலர் அறிவு ஜீவிகளாகவும், சிலர் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். சிலரிடம் இருந்து நாம் நன்மை பயக்கும் விடயங்களை (விஷயங்களை......தூய தமிழ் வார்த்தை உபயம் - கலசம் வானொலி) கற்றுள்ளோம். சிலரை பார்த்து நாம் எவ்வாறு இருக்க கூடாது என தெரிந்து உள்ளோம். சிலரை பார்த்து வணங்கியும் உள்ளோம்.

அவர்களுள் சிலர் நம் மனம் கவர்ந்த கதா நாயகர்களாகவும் (Heros) மற்ற சிலர் எதிர் மறை கதா நாயகர்களாகவும் (Anti-Heros) இருந்துள்ளனர். அப்படி பட்ட அந்த ஒரு சிலர் இன்று நம்மோடு இல்லை. 2011-ஐ போகிற போக்கில் நாம் வழி அனுப்பும் பொழுது இவர்களும் நம்மிடம் இருந்து விடை பெற்றவர்கள். அவர்களை சற்றேனும் நினைத்துப் பார்க்க இந்த வலைப் பதிவு.

நன்றி.

                
                 

Thursday 22 December 2011

writersujatha.com

 
சுஜாதா என்கிற புனை பெயர் கொண்ட அமரர் திரு.ரங்கராஜன் அவர்கள் எழுத்து உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தார் என்று கூறினால் அது மிகை ஆகாது. எனது ஊரில் பிறந்தவர் என்கிற காரணத்திற்காக நான் இதை தெரிவிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தாலும் நான் அதற்கு பெருமை கொள்கிறேன். 

அப்பேற்பட்ட மாமனிதரின் படைப்புகள் இன்றைய இளைய தலைமுறைக்கு, இப்பொழுது எளிதில் கிடைக்க வழி வகைவகை செய்துள்ளார்கள். இதை ஒரு தனிப்பட்ட முயற்சியாக செய்தவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அவரது மனைவி திருமதி.சுஜாதா அவர்களை உரிமையாளராக கொண்டு ஒரு அதிகாரபூர்வ இணையத்தளம் (Official Website) உருவாக்கப்பட்டுள்ளது.  அந்த இணையத்தளம்


இந்த இணையத்தளத்தில், எனக்கு தெரிந்து  அவரின் அனைத்து படைப்புகளும் மின்-புத்தகங்களாக (e-books) ஆகா பதிவேற்றம் (upload) செய்துள்ளார்கள். அவை அனைத்தும் 3 முதல் 5 அமெரிக்க டாலர்கள் (3 to 5 USD) விலைக்கு கிடைக்கிறது. அவரின் படைப்புகளால் ஏற்படும் திருப்தி மற்றும் அறிவை கணக்கிடுகையில் இந்த விலை என்னை பொருத்த வரையில் ஒன்றும் இல்லை என்றே கூறுவேன். இதில் உபயோகம் உள்ளது என்று நினைப்பவர்கள், நீங்கள் விரும்பும் புத்தகத்தை e-commerce என்கிற வலை தொடர்பில் (link) சென்று கட்டணம் செலுத்தி பதிவு இறக்கம் (download) செய்துகொள்ளுங்கள்.

எனது இந்த பதிவை அந்த மாமேதைக்கு சமர்ப்பிக்கிறேன்.

குறிப்பு:
இந்த வலைத்தள ஆசிரியர் /  உரிமையாளர், எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் மீது கொண்ட அபிமானத்தின் வெளிப்பாடாக இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் / வலைத்தள ஆசிரியர் /  உரிமையாளருக்கும் , http://www.writersujatha.com உரிமையாளர் / நிர்வாகிக்கும்  (Admin) எந்த சம்பந்தமோ / தொடர்போ இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

பூண்டு....மருத்துவ குணங்கள் (கலசம் ரேடியோ பிட்ஸ்)

வழக்கமா நான் Office போகும்போதும் சரி, சாயங்காலம் வீட்டுக்கு வரும் போதும் என்னுடைய  Mobile Phoneல் Radio கேட்பது வழக்கம். அதுவும் என்னுடைய 3G Nokia Smart Phoneல் Internet Radioக்கள் புதிய Software updateல் கிடைச்சது எனக்கு ஒரு அதிர்ஷ்டம் அடிச்ச மாதிரி இருக்கு. அப்படி Radio கேட்கும் பொது என்னோட முதல் choice கலசம் radio தான். அப்படி இன்னைக்கு கேட்கும் போது "பூண்டு" பத்தின சில Medical tips கெடச்சுது. எதுக்கு use பண்றோம் அப்படினே தெரியாம நம்ம தமிழ்நாட்டு சமையலில் பூண்டு-ஐ use பண்றோம். சாப்பிடுறோம். சில நேரம் வாய் smell அடிக்கும் அப்படின்னு சாப்பிடாம இருக்கோம். அந்த ரேடியோல சொன்ன சில விஷயங்கள் உங்க தேவைக்கு......

1) ரத்தத்தை (Blood) சுத்தபடுத்த பூண்டு ரொம்ப உதவுதாம். அதில் இருக்க கிருமிகளை பூண்டு அழிக்குதாம்.

2) Liverக்கு ரொம்ப நல்லதாம்.

3) பூண்டு-ஐ எப்படி நம்ம உடம்புல correctஆ use பண்ணனும்னா, பசும் பால் நல்லா கொதிக்கும் போது ரெண்டு பல் பூண்டை தட்டி பாலில் போட்டு, பாத்திரத்தை தட்டு போட்டு நல்லா கொதிக்க வெக்கனுமாம் . நம்ம குழம்புல இருக்க பூண்டு-ஐ விட இதுல effect இன்னும் ஜாஸ்தியா இருக்குமாம்.

4) அப்படி இல்லன்னா தேன்-ல பூண்டு-ஐ மேல சொன்னபடி தட்டி போட்டு சாப்பிடனுமாம்.

5) இது எதுவுமே புடிக்காதவங்க, பூண்டு ரசம் வெச்சி சாபிடலாம் அப்படின்னு சொல்றாங்க. அதுலயும் பூண்டு-ஐ நல்ல தட்டி போடணுமாம்.

6) இப்படி சேர்த்துகுரவங்களுக்கு மூட்டு, எலும்பு பிரச்சனை எல்லாம் வயசான காலத்துல வராது அப்படின்னு வேற சொல்றாங்க.

7) நீங்க சரக்கை (சரக்கு அப்படின்னா என்னன்னு தெரியாத பச்ச பிள்ளைங்களுக்கு Englishல Liquorன்னு சொல்லுவாங்க) வேணும்னா Rawவா அடிச்சிருக்கலாம். ஆனா பூண்டு-ஐ Rawவா சாப்பிட்டா சில பேருக்கு acidity மாதிரி வரலாம். வாய் புண்ணாக போக கூட வாய்ப்பு இருக்கு.

இதையே நான் wikipediaவில் தேடும்போது உண்மைஅப்படின்னு புரிஞ்சது. நீங்களும் தெரிஞ்சுக்கனும்னா http://en.wikipedia.org/wiki/Garlic அப்படிங்கிற linkல் படிச்சுகோங்க.

குறிப்பு:
இந்த பதிவு (Post) வாசகர்களின் நன்மை கருதி வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் / வலைதள உரிமையாளரின்  கருத்தை வாசகர்களிடம் திணிப்பது நோக்கம் அல்ல. இந்த மருத்துவ குறிப்பை பின்பற்றுவது வாசகர்களின் சுய விருப்பு வெறுப்பை பொறுத்தே ஆகும். உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.

Monday 19 December 2011

நீயும் நானுமா? சசி...நீயும் நானுமா?



மேல்லோகத்தில் பார்வதி சிவனிடம் கேட்கிறாள்:

பார்வதி: பிரபோ, பூலோகத்தில் இன்று என் நிறைய பேர் மொட்டை அடித்து திருவிழா போல கொண்டாடுகிறார்கள்?

சிவன்: அவர்கள் அ.தி.மு.க கட்சியின் உண்மை விசுவாசிகள். எதற்கு அப்படி கொண்டாடுகிறார்கள் என்று கூறுகிறேன் கேள்.......

அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம்

தனது நீண்ட கால தோழி மற்றும் அவர்கள் சொந்தங்களையும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கியுள்ளார் ஜெ. ரொம்ப காலமாகவே அவர்கள் நட்பு, மக்கள் மட்டும் அல்ல அவர்கள் கட்சி விசுவாசிகளுக்குமே ஒரு புரியாத புதிராக இருந்து வந்துள்ளது. கட்சி மற்றும் ஆட்சியிலும் அவர்களின் ஆதிக்கம் இல்லாத இடமே இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவுக்கு அவர்கள் தான் அ.தி.மு.க என்கிற பிம்பத்தை உருவாக்கியதாக அக்கட்சியின் விசுவாசிகள் நம்பினார்கள். இதனால் எம்.ஜி.அர் அவர்களின் உண்மை விசுவாசிகளுக்கு கட்சியில் இடம் இல்லாமல் போனது. இதனை தொண்டர்கள் எத்தனையோ முறை ஜெ.விடம் சொல்ல நினைத்து முடியாமல் போனது. இன்றைக்கு வெளியேற்றப்பட்டவர்கள் ஒரு Windows Firewall போல செயல்பட்டு அடிமட்டத்தில் இருந்து வரும் தகவல்களை ஜெ.விடம் முறையாக போய் சேராதபடி பார்த்துகொண்டவர்கள். இதனை அரசால புரசலாக தெரிந்து கொண்ட ஜெ. இனியும் சும்மா இருந்தால் நல்லதல்ல என களத்தில் இறங்கி இப்படி செய்துள்ளார். தங்கள் மனது அறிந்து அவர்கள் தலைவி செயல்பட்டதால் அக்கட்சியின் விசுவாசிகளும், இன்று வெளியே அனுப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்களும் அவ்வாறு கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

பார்வதி: ஒ...ஹோ.....அது தான் செய்தியோ......அப்ப ரொம்ப நாளா அவர்களுக்குள் ஒரு “கெளரவம்” திரைப்படத்தை போல ஒன்று ஒட்டிருப்பர்கள் என்று கூறுங்கள்...

சிவன்: இதில் இன்னொன்றையும் நான் சொல்லி ஆகா வேண்டும். இந்த பிரிவால் எதிர் அணியினரின் செயல் எப்படி இருக்கும் என்பதையும் நாம் பொறுமையாக கவனிக்க வேண்டும். இதை எதிர் பார்த்துத்தான்  பூலோகத்தில் இருக்கும் அரசியல் நோக்கர்கள் ஆர்வமுடன் இருகிறார்கள்.

பார்வதி: நானும் சென்று பார்த்துவிட்டு வரட்டுமா பிரபோ....

சிவன்: நமக்கேன் அந்த வீண் வம்பு....நமக்கும் அந்த பூலோக அரசியலுக்கும் ரொம்ப தூரம்பா...ஆளை விடு.....

நாராயண நாராயண....

சிவன்: வாருங்கள் நாரதரே.....நீங்கள் என்ன 'கழகம்' ஐயோ...இந்த பூலோக அரசியல் பேசி எனக்கும் 'கழகம்' ஒட்டிகிச்சே.....மன்னிக்கவும் நாரதரே.....நீங்கள் என்ன 'கலகம்'  செய்ய வந்துள்ளீர்...

Saturday 17 December 2011

கலசம் இணைய வானொலி


வணக்கம் நண்பர்களே!

கொஞ்ச நாள் முன்னாடி நான் பொழுது போக்குறதுக்காக சில internetல ஒரு rounds வந்தேன் (இப்போ மட்டும் என்ன உருப்படியா எதாவது பண்றியா அப்படின்னு நீங்க கேக்குறது காதில விழுது...அதெல்லாம் விட்டு தள்ளுங்க பாஸ்...). அப்ப சில இணைய வானொலி வலைத்தளங்கள் (புரியாதவங்களுக்கு இங்கிலிஸ்ல சொல்றேன் Online or Web Radios) என் கண்ணுல பட்டுச்சு. அதுல நான் கேட்டு எனக்கு ரொம்ப புடிச்சது, ரொம்ப informative இருக்க ரேடியோ "கலசம்" அப்படிங்கிற ரேடியோ.

அந்த கலசம் ரேடியோவோட சில specialties கொஞ்சம் இங்க list பண்றேன்.

1) விளம்பரம் கொஞ்சம் கூட கிடையாது இல்ல ஒன்னு/ரெண்டு விளம்பரம் தான் ஒரு நாளைக்கு.

2) பெரும்பாலும் மெலடி, காதல் பாட்டுக்கள் தான். Rough ஆன பாட்டுக்கள் ரொம்ப கம்மி.

3) ஒவ்வொரு பாட்டுக்கு நடுவிலயும் தமிழ் சினிமா ஜோக்ஸ், தமிழ் சினிமா Punch Dialogues, சுகி சிவம் inspirational speeches, தமிழ் மொழிய பத்தின சுவையான விஷயங்கள், தமிழ் நாடு / இந்தியா பத்தின சுவையான விஷயங்கள், தமிழ் சினிமா sentimental dialogues, வரலாற்று பதிவுகள், அண்ணா / காமராஜர் / பெரியார் / திருமுருக கிருபானந்த வாரியார் மேடை பேச்சுகள், Vijay TV "நீயா நானா"ல வந்த முக்கியமான / நகைச்சுவையான தொகுப்புகள், Sun TV "அசத்த போவது யாரு" காமெடி தொகுப்பு....இப்படி எவ்வளவோ இருக்கு.

என்னோட இந்த வலை பதிவுல "கலசம்" ரேடியோ தான வேலை பாக்குற மாதிரி செட் பண்ணிருக்கேன். கேளுங்க. புடிச்சிருந்தா சந்தோஷபடுங்க. பிடிக்கலையா உங்க வலது பக்கம் இருக்க அந்த gadgetல ரேடியோவ switch-off  பண்ணிடுங்க.

ரேடியோ வேலை பார்கலனா உங்க Browser Plug-insஅ கொஞ்சம் check பண்ணிகோங்க. அப்படியும் வேலை செய்யலியா கீழ இருக்க வலைதளத்துல எதாவது ஒன்ன பயன்படுத்தி அந்த ரேடியோவ நீங்க கேட்கலாம்.

www.kalasam.com
www.tamilfms.com

இந்த player embedded link, Internet Explorer 9, Fire Fox 8.0.1,Google Chrome மற்றும் Safari 5.1.2 ஆகிய browserகளில் test செய்த பிறகே இந்த வலைதளத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அதையும் மீறி ரேடியோ வேலை செய்யல அப்படினா நீங்கள் உங்கள் கணிணி திறனை கொண்டு சரிசெய்து எனக்கு தெரியபடுத்தவும்.

நன்றி.